சில உணர்வுகள்

By Admin - 12 Jan 2025 60 0

அந்திமாலையின் அடைமழை நிறைந்த,
ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,
வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,
புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளி

அலைந்து அடங்கும் காற்றின் தாலாட்டலில்,
நினைவுகளின் நிழல் ஆடிய புதர்கூடத்தில்,
சத்தமின்றி பூக்கும் பூவின் ஓசை,
வண்டுகளின் ரீங்காரம், பறவையின் இசையும்...

தன் வீட்டின் முற்றத்தில், விளையாடும் தவளை,
சிறகில் பிறந்த இறகைப்போலே,
மண் எங்கும் மண் வாசனை
வாடியதெல்லாம் மீண்டும் துளிர்ந்தது..

நெடிய வயல்களும், செடிகளும், மரங்களும்,
பறவையும், ஓடும் ஆறும் - காற்றின் இராகத்திற்கு
தலை அசைத்து நன்றி சொன்னது பூமிக்கு,
இயற்கையின் அன்புக்கு மொழி தேவை இல்லை...

விழுந்தால் அம்மா சொல்வதும்,
வாடினால் அப்பா சொல்வதும்,
துவண்டால் தோள் சாய்வதும் - மனிதனுள்
விதைக்கப்பட்ட இயற்கையின் துகள் அது..

உணவு, உடை, இருப்பிடம், காற்று, பேசிக் கொள்ள
ஆயிரம் வார்த்தைகள், ஆண்டுகள் கடந்தாலும்
செயற்கை நுண்ணறிவால் என்றும் மாறாதது
நாம் இயற்கையோடு கொண்ட சில உணர்வுகள்.

Add Your Comments

Say Something

 

Comments

No comments.