இன்பத்துள் இன்பம்

By Admin - 23 Jun 2025 216 0

இன்பத்துள் இன்பம் செவிச்சொல் இன்சொலால்
நன்பால் நலங்கொடுக்கும்.

அந்திமாலையின் அடைமழை நிறைந்த,
ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,
வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,
புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளி

அலைந்து அடங்கும் காற்றின் தாலாட்டலில்,
நினைவுகளின் நிழல் ஆடிய புதர்கூடத்தில்,
சத்தமின்றி பூக்கும் பூவின் ஓசை,
வண்டுகளின் ரீங்காரம், பறவையின் இசையும்...
தன் வீட்டின் முற்றத்தில், விளையாடும் தவளை..

இவையெல்லாம், இயற்கையின் இன்சொல்லே...
எல்லாம் தானாய் நடக்கிறது...
அதனின் இன்சொல்லும்,
இரகசிய உரையாடலும் 
கோடி ஆண்டுகள் கடந்து நாம் 
இன்றும் பயணிக்கிறோம்...

ஒரு சொல் –
உறவை இணைக்கும்,
வலியை மறக்கும்,
வழியைத் தோற்றுவிக்கும்.

தோளும் சாயும்,
கைக்குள் விரலும் கொடுக்கும்..

சில நேரங்கள்,
வா என்ற சொல்,
தனிமையை உடைக்கும்,
நன்றி என்ற சொல்,
இதயத்தை துளைக்கும்..

எம்மொழியில் –
"அவர்கள் நல்லா இருக்கட்டும்…"
என்பது கோபத்துக்கே பதிலாக
சொல்லும் இன்சொல்..

நல் சொல் பேசிய,
வீட்டின் சுவற்றின்,
எங்கு உரசினாலும்,
சொல்லும் அழகிய கதைகள்..

மனம், என்றும் ஏங்குவது 
ஒரு சொல்லுக்கு...
அது நாளையும் மாற்றும், 
வாழ்வையும் மாற்றும்.

கண் விழித்தபோது,
எதிர்ச்சையாக கேட்ட ஒருப் பாடல்
அன்று முழுவதும், 
தன்னை மறந்து  
உதடுகளில் மெளனமாய் வசிக்கும்.

அதுவே அழகிய இன்சொல் இருந்தால்,
நம்மையும் மாற்றும்,
சுற்றியுள்ள சினம் காட்டிலே
அழகிய பூவும் பூக்கச் செய்யும்.

ஒரு மாய வார்த்தை தான்
நாம் பேசும் இன்சொல்..
அதுவே இன்பத்துள் இன்பம்..
நமக்கும், 
நாம் வாழ்கின்ற வாழ்வுக்கும்...

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.